கோத்தபாய தப்பி ஓடவும் இல்லை விரட்டியடிக்கப்படவும் இல்லையாம்!

கோட்டாபய ராஜபக்ச, நாட்டைவிட்டு தப்பியோடவும் இல்லை. அவர் விரட்டியடிக்கப்படவும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களையடுத்து இலங்கையை விட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவருடைய சகோதரர் பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் சில தரப்புக்களின் சதி முயற்சியால் திடீரென எழுந்த கொந்தளிப்பு நிலைக்குத் தீர்வு காணவே கோட்டாபய ராஜபக்ச சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியிருந்தார்.

நாட்டில் தற்போது அமைதி நிலவுவதால், அவர் மீண்டும் இங்கு வந்துள்ளார். அவர் இலங்கைப் பிரஜை. ஒரு முன்னாள் ஜனாதிபதி.

இந்நிலையில், அவர் வெளிநாடுகளில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. நாடு திரும்பியுள்ள அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளை அரசு வழங்குகின்றது.

அவர் விரும்பினால் மீண்டும் ‘மொட்டு’க் கட்சி ஊடாக அரசியலுக்குள் நுழையலாம். இது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *