30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அம்மாவாக நடிக்கிறார் நடிகை அமலா!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கணம்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் சர்வானாந்த கதாநாயகனாக நடிக்க அவருக்கு அம்மாவாக அமலா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அமலா 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்க, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகை அமலா பேசுகையில், “ஒரு படத்தை பற்றி சாதாரணமாக இவ்வளவு பேச மாட்டார்கள். என்னுடைய இளமை காலத்தில் ஆதரித்த தமிழ் மக்களிடம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அம்மாவாக வந்துருக்கிறேன். இப்படம் எனக்கு மிகமிக சிறப்பான படம்.

எங்கிருந்தாலும், எப்போது இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் இந்த படம் அனைவரையும் இணைக்கும்; உங்களை சிரிக்க வைக்கும். ஆழமான அன்பை உணர்வுபூர்வமாக அழகாக கொடுத்திருக்கிறார் ஸ்ரீ கார்த்திக். அம்மாவாக இருக்கும் அனைவருக்கும், போராட்டங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இருக்கும்.

இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையடைகிறேன். இந்த கதாபாத்திரம் கொடுத்ததற்கு ஸ்ரீ கார்த்திக்கு நன்றி. உங்கள் அம்மாதான் இந்த படத்திற்கு உத்வேகம் கொடுத்தார் என்று எனக்கு தெரியும். இந்தப்படத்தை அவரும் நம்முடன் பார்த்து நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன். நான் எந்த படம் பார்த்தாலும் பார்வையாளராக தான் பார்ப்பேன். வரும் செப்டம்பர் 9ஆம் தேதியும் இப்படத்தை பார்வையாளராக பார்க்க ஆவலாக உள்ளேன்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *