நீதிக்கான பிரேரணையை முழுமையாக வரவேற்போம்! – சம்பந்தன் தெரிவிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.”

– இவ்வாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது. பிரிட்டன் தலைமையில் இது முன்வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை விவகாரம் ஜெனிவாவில் இம்முறை எதிரொலிக்கும் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.

இறுதிப் போரில் நடந்த மன்னிக்க முடியாத சம்பவங்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சார்பாக எந்தப் பிரேரணை வந்தாலும் அதனை முழுமையாக வரவேற்போம்.

அந்தப் பிரேரணையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தங்களையும் கொடுத்து வருவோம்” – என்றார்.

– அரியகுமார் யசீகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *