கால்சட்டைக்குள் 60 பாம்புகளை வைத்து கடத்திய நபர்!
750,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஊர்வன கடத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாம்புகள் மற்றும் பல்லிகளை தனது கால்சட்டையில் மறைத்து வைத்து அமெரிக்காவிற்குள் கடத்த முயன்ற ஒரு நபர் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு கலிபோர்னியாவில் வசிக்கும் ஜோஸ் மானுவல் பெரெஸ் (Jose Manuel Perez) என்ற நபர் இந்த ஆண்டு மார்ச் மாதம் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்த ஒரு விமானத்தில், தனது கால்சட்டையில் பாம்புகள், பல்லிகள் என 60க்கும் மேற்பட்ட ஊர்வன விலங்குகளை மறைத்துவைத்து கடத்த முயன்றபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் மெக்சிகோ மற்றும் ஹொங்ஹொங் வழியாக ஆறு வருடங்களுக்குள் 1,700 விலங்குகளை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக கடத்தும் மிகப்பெரிய சதித்திட்டத்தின் மாஸ்டர்மைண்ட் என்பது தெரியவந்தது.
அவர் அளித்த வாக்குமூலத்தில், சில சமயங்களில் அவரே விலங்குகளை பல வழிகளில் கடத்தியுள்ளதாகவும், மற்ற நேரங்களில் சிலரிடம் பணம் கொடுத்து அவர்களுக்கே தெரியாமல் விலங்குகளை மறைத்து வைத்து பெட்டிகள் அல்லது லக்கேஜ்கள் மூலம் கடத்தியுள்ளதாகவும் ஒப்புக்கொண்டார்.
அவர், இதுவரை யுகடன் பாஸ் ஆமைகள், மெக்ஸிகன் பாஸ் ஆமைகள், இளம் முதலைகள் மற்றும் மெக்ஸிகன் பிரடெட் பல்லிகள் உட்பட அமெரிக்க முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 739,000 டொலர்களுக்கும் அதிகமாக விற்றுள்ளதாக கூறினார்.