5 வயதிலுருந்து ஒரே வகை சாண்ட்விச்சை உண்ணும் மாகாராணி!

5 வயது முதல் ஒரே வகையான சாண்ட்விச்சை தான் இங்கிலாந்து ராணி எலிசபெத் சாப்பிட்டு வந்துள்ளார்.

ராஜ பரம்பரையை சேர்ந்தவர்கள் சாப்பிடும் உணவு, பாமர மக்கள் உட்கொள்வது போல இருக்காது. அவர்கள் மிகவும் விலை உயர்ந்த நாம் இது வரை அறிந்திடாத உணவுகளை சாப்பிடுவார்கள் என்றும் அதெல்லாம் அதிக ருசியுடன் இருக்கும் என்றும் நினைத்திருப்போம்.

அப்படித்தான் நாம் பார்த்த சினிமாக்களிலும் காண்பித்திருப்பார்கள். அதிலும் மேலே நாட்டு ராஜகுடும்பத்தினர் என்றால், வாயில் நுழையாத பெயர்களில் உணவு வகைகள் அடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்பது போல வெளியாகியிருக்கிறது ஒரு தகவல்!

இங்கிலாந்து ராணி எலிசபெத், தனக்கு 5 வயது இருந்தது முதல், ஒரே வகையான சாண்ட்விச்சை தான் விரும்பி உண்கிறாராம். மற்ற வகையான உணவுகளை இவர் சேர்த்துக்கொண்டாலும், இவரது சாண்ட்விச் மட்டும் மாறவே மாறாதாம்.

ப்ரெட்டில் வெண்ணை மற்றும் ஜாம் தடவி தயார் செய்யப்படும் சாண்ட்விச் தான் அது!… ராணி எலிசபெத்துக்கு 5 வயது இருக்கும்போது இதனை முதலில் அவர் சுவைத்துள்ளார். பிடித்துப்போகவே, அதையே வழக்கமாக சாப்பிட்டு வந்திருக்கிறார் எலிசபெத்.

இந்த தகவலை பகிர்ந்தது ராணியின் தனிபட்ட செஃப் டாரென் மெக்கிரடி என்பவர். இவர் எலிசபெத் ராணிக்கு சமையல்காரராக 15 வருடங்கள் பணியாற்றியுள்ளார். மேலும் இளவரசி டயானா, இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோருக்கும் சேவை புரிந்திருக்கிறார் டாரென்.

டாரென் ஒரு வீடியோவில் அவரது அனுபவங்களை பகிர்ந்துகொண்டபோது, “எலிசபெத் ராணிக்கு 5 வயது இருக்கும் போது, நர்சரியில் அவருக்கு இந்த பிரெட் பட்டர் ஜாம் சாண்ட்விச் வழங்கப்பட்டது! அப்போதிலிருந்து, மதியம் தேனீர் அருந்தும்போது, அவர் இந்த சாண்ட்விச்சை தான் சாப்பிட்டு வந்துள்ளார்” என கூறியிருந்தார்.

இந்த சாண்ட்விச்சில் பயன்படுத்தப்படும் ஜாம் பெரும்பாலும் ஸ்ட்ராபெரி பழங்களால் தயாரிக்கப்படுபவை. இதற்காக ஸ்காட்லாந்தின் தோட்டங்களில் விளையும் சிறந்த வகை ஸ்ட்ராபெரி பழங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். மற்ற வகை சாண்ட்விச்கள் பரிமாறப்பட்டாலும், எலிசபெத் ராணி விரும்புவது இந்த எளிமையான பிரெட் பட்டர் ஜாமை தான்.

மேலும், அவர் உட்கொள்ளும் ஃபிஷ் அண்ட் சிப்ஸ் உணவும், பிரதியேகமான முறையில் தயாரிக்கப்படுகிறது! வழக்கமாக எண்ணையில் பொறித்தெடுக்கப்படும் மீனை, ராணி, பேக் செய்து தான் உண்பாராம்..

இந்த தகவல் வெளியானதிலிருந்து, பலரும், ராணியின் எளிமையை பாராட்டி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *