இருப்பிடமின்றி நாடு நாடாக அலைகின்றார் கோட்டா! – சஜித் கிண்டல்

“இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்தனர் என்று வீறாப்புப் பேசி வந்த கோட்டாபய ராஜபக்ச இறுதியில் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி இருப்பிடம் இல்லாமல் ஒவ்வொரு நாடு நாடாக அலைகின்றார்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இம்மாதம் 11ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலங்கை வருவார் என்றும், அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்த ‘மொட்டு’ அணியினர் வாயடைத்து நிற்க, கோட்டாபய தாய்லாந்து நாட்டின் காலடியில் தற்போது விழுந்துள்ளார். அங்கும் அவர் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்க முடியாது.

அவர் இனி எந்த நாட்டின் காலடியில் விழப்போகின்றார் என்பதை ‘மொட்டு’க் கட்சியினரிடம் கேட்க விரும்புகின்றேன்.

நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய, இனி நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் மீண்டும் இலங்கை வந்தால் மென்மேலும் அவமானங்களைச் சந்திக்க வேண்டி வரும். மக்களை வாட்டி வதைத்த கோட்டாபய, இன்று உலக அரங்கில் அவமானப்பட்டு நிற்கின்றார்” – என்றார்.

– Ariyakumar Jaseeharan 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *