சந்தையில் விற்கப்படும் மாப்பிள்ளை வாங்கும் பெண் வீட்டார்!
முன்பெல்லாம் திருமணத்திற்கு வரன் தேடுவது கடினமான காரியமாக இருந்தது. புரோக்கர்கள் மூலம் பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரை அணுகுவார்.
ஆனால் தற்போது நாம் இருப்பது டிஜிட்டல் உலகம் என்பதால் ஆன்லைனில் அதாவது மேட்ரிமோனி போன்ற இணையதளங்களில் வரன்களைத் தேடி வருகின்றனர்.
ஆனால் இந்த நவீனக் காலத்தில் மாப்பிள்ளைகளை சந்தையில் வாங்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் சொன்னால் நம்ப மாட்டீர்கள், 700 ஆண்டுகளாகப் பீகாரில் இவை பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
பீகாரின் மதுபானி மாவட்டத்தில் மாப்பிள்ளை விற்பனைக்காக ஒரு சந்தை உள்ளது. மணப்பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்து மணமகனின் குடும்பப் பின்னணி மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் அவர்கள் விரும்பும் வரன்களை தேர்வு செய்துகொள்கிறார்கள்.
உள்ளூரில் உள்ள ஆலமரத்தடியில் 9 நாட்களுக்கு இந்த சந்தை ஏற்பாடு செய்யப்படுமாம். இந்த பாரம்பரியம் 700 ஆண்டுகளாக அங்கு பின்பற்றப்பட்டு வருகிறது
அந்த சந்தையில் மணமகனைத் தேர்வு செய்யும் முன்பு, அவர்களின் குடும்பங்கள், மாப்பிள்ளையின் படிப்பு தகுதி மற்றும் அவர்களின் குடும்பப் பின்னணியைச் சரிபார்த்துக்கொள்வார்கள்.
மணமகள் மணமகனைத் தேர்ந்தெடுத்தவுடன், இரு குடும்பங்களும் சேர்ந்து திருமண பேச்சு வார்த்தையைத் தொடங்குவார்களாம்.
வரதட்சணை இல்லாத திருமணங்களை நடத்துவது மற்றொரு நோக்கமாக இருந்தது. ஆனால், இன்று இந்த திருமணங்களில் வரதட்சணை கொடுத்து வாங்கும் பழக்கம் அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.