மனைவியின் ஆசைப்படி மேளதாளத்துடன் நடனமாடி மனைவியை அடக்கம் செய்த கணவன்!

இந்தியாவில் மனைவியின் ஆசைப்படி இறுதி ஊர்வலத்தை மேளதாளத்துடன் கணவர் பிரம்மாண்டமாக நடத்திய சம்பவத்தின் மனதை நெகிழவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஒளிப்படக் கலைஞரான ஸ்ரீநாத் சோலங்கி (30). இவரும் மோனிகா என்ற பெண்ணும் கடந்த 2017ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு கருவுற்ற மோனிகா, வளைகாப்பு முடித்து தன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

9 மாத கர்ப்பிணியான அவருக்குத் திடீரென உடல்நலம் சரியில்லாமல் போகவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர் குழந்தை வயிற்றில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட பின்னர் தாயும், சேயும் உயிரிழந்தன.

இதையடுத்து மனைவியின் இறுதி ஊர்வலத்தை மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக ஸ்ரீநாத் நடத்தியுள்ளார். இது குறித்து ஸ்ரீநாத் கூறுகையில், ஒருமுறை நானும் மோனிகாவும் கேலியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, நான் போன பிறகு நீ அழுவாய் என்று கேலியாகச் சொன்னேன். அப்போது அவள், ‘நான் உனக்கு முன்னாலேயே போகிறேன்.

ஆனால், நான் போகும்போது நீ அழக்கூடாது. திருமணத்தில் டிரம்ஸ், பேண்ட் வாசிப்பதைப் போல, நான் போகும்போதும் வாசித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றாள்.

மோனிகா மரணத்தின்போது எனக்கு அது நினைவுக்கு வந்தது. அதனால், என் மனைவி மோனிகா மற்றும் பிறந்து இறந்த பெண் குழந்தையின் இறுதிச் சடங்கை பேண்ட் வாத்தியங்களோடு நடத்துவது என்று முடிவெடுத்தேன்.

திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்தைப் போலவே, கடவுள் எங்களுக்குப் பெண் குழந்தையைக் கொடுத்தார். ஆனால், அவளால் இந்தப் பூமியில் 3-4 நிமிடங்களே சுவாசிக்க முடிந்தது.

நான் இல்லாமல் போனால் தான் உனக்குப் புரியும் என்று சொல்வாள். என்னால் அதைத் தாங்கவே முடியாது. இந்த மாதிரி பேசுவதை நிறுத்தச் சொல்வேன். அப்போதுகூட ஒருமுறை, டியர் என்று கூப்பிட்டு, நான் இறந்தால் இசை வாத்தியங்களோடு, நீ ஆடிக் கொண்டே என் உடலைச் சுடுகாடு வரை எடுத்துப் போக வேண்டும் என்று கூறினாள் என உருக்கமாக முடித்தார் ஸ்ரீகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *