அடுத்த 6 மாதங்கள் மிகவும் கடினமானவை இதுவரை நாம் அனுபவித்திராத காலமாக இருக்கும்!

எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என்றும், இது நாம் ஒருபோதும் அனுபவிக்காத காலகட்டமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும், அதை மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதைத் தவிர, இந்தச் சூழ்நிலையில் இருந்து மீள எங்களிடம் வேறு தீர்வு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அது நல்லதா கெட்டதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முதலில் ஊழியர்கள் மட்டத்தில் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும்.

ஆனால், நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியும் அதற்கு உடன்படவில்லை என்றால் உங்களின் தீர்வு என்னவென்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. அல்லது உங்கள் மாற்றுத் தீர்வு என்ன? இதற்கு அனைத்து தரப்பினரும் உடன்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் நாம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினை, அரசாங்கங்கள் மாறும்போது கொள்கைகள் மாறுவதுதான். அதற்கு நாம் தயாரா என்பதைச் சிந்திக்க வேண்டும். அதை நாடாளுமன்றம் நிராகரித்தால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.

ஆனால் எதிர்காலம் கண்டிப்பாக கடினமாக இருக்கலாம். நான் அதை மறுக்கவில்லை. முதல் 6 மாதங்கள் மிகவும் கடினம். இது நாம் அனுபவித்திராத நேரம், ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும். நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது. பழைய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுதான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே நாம் மீண்டும் அந்த பொறிமுறைக்குச் செல்வதில் அர்த்தமில்லை. புதிதாக சிந்திப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *