தலைமைப் பதவியில் இருந்து விலகி ரணிலுடன் இணைகிறார் மனோ?
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,மலையகத் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.அதற்காக மலையக அபிலாஷை ஆவணத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.எனவே, கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து விலகி, அப்பணியை செய்ய எதிர்பார்க்கின்றேன்.
கூட்டணியில் தகுதியானவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தலைவராவார். மலையக அபிலாஷை ஆவணம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் முஸ்லிம் கட்சி உறுப்பினர்களை புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.இதன் காரணமாக மனோ கணேசனுக்கும் முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.