எரிபொருள் இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!
இலங்கையில் நிலவும் கடும் எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில், அதை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“பெட்ரோலிய பொருள்களை இறக்குமதி செய்யவும் அதை விநியோகிக்க, விற்பனை செய்யவும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,” என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்தார்.
இப்போதைக்கு இலங்கையில், இந்தியன் ஆயில் நிறுவனம், சிலோன் பெட்ரோலிய நிறுவனம் ஆகிய இரண்டு எண்ணெய் நிறுவனங்கள்தான் உள்ளன.
1,190 எரிபொருள் நிரப்பும் நிலையங்களால் நாட்டின் 80 விழுக்காட்டு தேவையைக் கட்டுப்படுத்தும் சிலோன் பெட்ரோலியம் நிறுவனம், அதன் எரிபொருள் நிலையங்கள் போன்றவற்றின் குறிப்பிட்ட ஒரு பகுதியை, புதிய எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுக்கும் என்றது அரசாங்கம்.
இதற்கிடையே, இலங்கையின் வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறைக்கு உதவுமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதர் தெரிவித்தார். இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அவசர நிதி வழங்குவது குறித்தும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.
இலங்கையின் தேயிலை, மசாலா பொருள்கள், ஆடைகளை சீன நிறுவனங்கள் அதிகளவில் வாங்க அந்நாட்டு அரசு கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் இறக்குமதி விதிகளை சீனா எளிதாக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இலங்கை மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளும் அறுவை சிசிச்சைக்கு தேவைப்படும் உபகரணங்களும் முற்றிலும் தீர்ந்துவிட்டன. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக மருந்துகள் வாங்க முடியவில்லை.
குழந்தைகளுக்கான மருந்து, வலி நிவாரண மருந்து, நோய் எதிர்ப்பு மருந்து ஆகியவை முற்றிலும் தீர்ந்துவிட்டன. மற்ற மருந்துகளின் விலை கடந்த மூன்று மாதங்களில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன.
நாட்டின் பொது சுகாதாரச் சேவை குறித்த ஆக அண்மைய நிலைமையைப் பற்றி அரசாங்க அதிகாரிகள் கருத்துரைக்கவில்லை. ஆனால் அது மோசமான நிலையில் இருப்பதாக ஐநாவின் இலங்கை ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.