இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்!
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பாதுகாப்பு படையினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளின் செயற்பாடுகளினால் சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் நிகழாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனிடையே, காலிமுகத்திட போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிரத்தியேகமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது