ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய மூன்று ரஷ்ய பிரபலங்கள்.கரடிகளுக்கு விருந்தான உடல்கள்!

ரஷ்யாவில் கோடீஸ்வர சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், அவர்களது உடலை கரடிகள் இழுத்துச் சென்று தின்றுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் விளையாட்டு வீரரும், தற்போது சுற்றுலா ஹெலிகொப்டர் விமானியுமான 25 வயது Igor Malinovskii மற்றும் அவருடன் சென்ற இரு கோடீஸ்வர சுற்றுலாப்பயணிகளுமே சனிக்கிழமை விபத்தில் சிக்கியுள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகொப்டர் மாயமாகியுள்ளது. இதனையடுத்து ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி, தரையில் விழுந்து தீப்பற்றியுள்ளது.

இதில் ரஷ்யாவின் பிரபல பெண் தொழிலதிபரான Zoya Kaygorodova மற்றும் பிரபல மொபைல்போன் நிறுவன நிர்வாகி Sergey Kolesnyak ஆகியவர்கள் மரணமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெளியான தகவலையடுத்து விரைந்த மீட்புக்குழுவினர், ஹெலிகொப்டரின் எரிந்த பாகங்களை மட்டுமே மீட்டுள்ளனர். ஜூலை 16ம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், அதன் அடுத்த நாள் ஹெலிகொப்டரின் எரிந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது

ஆனால் விமானி மற்றும் சுற்றுலாப்பயணிகள் இருவரின் உடல்களை அவர்களால் மீட்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், சிதைக்கப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதியில் இருந்து வெளியே மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்களின் உடல்களை அப்பகுதியில் அதிகமாக காணப்படும் பழுப்பு நிற கரடிகள் தின்றிருக்கலாம் என கூறப்படுகிறது. உக்ரைன் மீதான போர் தொடர்பில் மேற்கத்திய நாடுகளின் தடை காரணமாக கோடீஸ்வர ரஷ்யர்கள் தற்போது தங்கள் நாட்டுக்குள் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர்.

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. ஹெலிகொப்டர் விபத்து நடந்த பகுதியானது பழுப்பு நிற கரடிகள் அதிகம் வாழும் இடம் எனவும், சுமார் 10,000 முதல் 14,000 கரடிகள் வரையில் அப்பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *