சர்வதேச செய்தி சேவையில் தோன்றிய அர்ஜுன் மகேந்திரன்!
பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் பிலிப்பைன்ஸில் உள்ள CNN தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இணைந்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து இணையவழி காணொளி ஊடாக இந்த நேர்காணலில் கலந்து கொண்ட அவர் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்தார்.
இங்கு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் மற்றும் விவசாயத் துறையில் புதிய அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் ஆகியன தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணிகளாகும் என அவர் தெரிவித்தார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட வரிப்பணத்தை திரட்டி விவசாயத் தொழிலை புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து பணத்தை அச்சடிப்பதன் மூலமும், வரவு செலவுத் திட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலமும் நாட்டைக் காப்பாற்றுவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.