முல்லைத்தீவில் பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்,மாணவர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில்  பாடசாலை  மாணவிகள்  பலர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு சம்பவத்தில் ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில்  பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் பலரை தேடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு,  பாலியல் சேட்டை புரிந்து  பாலியல்  துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

குறிப்பாக அவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக  நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு  வந்த நிலையில், குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து மாணவிகள் பலரின்   நிர்வாண புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

இவ்வாறு ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் சிலரும் செய்த சேட்டையை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்து பார்வையிட்டபோது  பல மாணவிகளின்  நிர்வாணமாக  எடுத்துக்கொண்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மாணவிகளுடன் உடலுறவு கொண்ட  வீடியோக்கள் குறித்த தொலைபேசியில்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஆசிரியர்  மாணவர்களை பயன்படுத்தி மாணவிகளை காதல் வலையில் விழுத்தி,  அந்த மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்று ஆசிரியரும் அந்த மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட  பெண்கள் சிலரை விசாரணைக்கு அழைத்து   அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது ஒரு மாணவியை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் குறித்த ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலையில் ஆசிரியரோடு சேர்ந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாணவர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்த ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக இருந்த ஆசிரியர் இன்று  சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இதையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றத்தின்  நீதிபதி ரி.சரவணராஜா குறித்த நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *