கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!
குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடும் எதிர்ப்புகளையும் மீறி தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவை சேர்ந்தவர் ஷாமா பிந்து (24 ). சமூகவியல் பாடத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார். குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்தான். ஆனால், நாட்டையே வியப்பில் ஆழ்த்தக் கூடிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். அது, ‘நானே ராஜா; நானே மந்திரி’ என்பதுபோல், ‘நானே மணமகன்; நானே மணமகள்’ என்ற பாணியில் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆம். சில தினங்களுக்கு முன்னர் மணமகனே இல்லாமல் தனக்கு தானே திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
ஸோலோகாமி எனப்படும் இந்த சுய திருமணம் பெரும் பேசும்பொருளாக மாறி ஒரு தரப்பினர் இந்த திருமணத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி வந்தனர். ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த ஷாமா பிந்து, அறிவித்தத் தேதியை விட 3 நாட்களுக்கு முன்னதாகவே தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.முன்னணி நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் நாடு முழுவதும் பேசப்பட்ட நன்னாளில் தான், ஷாமா பிந்துவின் திருமணமும் நடைபெற்றுள்ளது. பிந்து வீட்டில் நடைபெற்ற விழாவில் இந்து மத சடங்கின் படி, மந்திரங்கள் ஓதி தனக்கு தானே மாலை அணிவித்து நெற்றியில் குங்குமமிட்டு இவருக்கு இவரே தாலி கட்டிக் கொண்டார். இந்த ஸோலோகாமி திருமணத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் முன்கூட்டியே விழாவை நடத்தியதாக பிந்து கூறியுள்ளார். பிந்துவின் நெருங்கிய தோழிகள் உட்பட 10 பேர் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்