ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!
ஆப்ரிக்காவின் தென் சூடான் நாட்டில் வெள்ளாடு ஒன்று பெண்ணை தாக்கி கொன்றுள்ளது. இந்த கொலைக் குற்றத்திற்காக அந்த ஆட்டுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
ஏடியு சாப்லிங் என்ற 45 வயது பெண்ணை அடித்துத் தாக்கி கொன்ற குற்றத்திற்காக, வெள்ளாடு ஒன்று மூன்றாண்டு சிறை வாசம் அனுபவிக்கவுள்ளது.
கிழக்கு ரம்பெக்கில், அக்யுல் யோல் என்ற இடத்தில், சாப்லிங் நடந்து சென்றுகொண்டிருந்த போது அந்த ஆடு தாக்கியது. ஓடிப்போய் அந்த பெண்ணை தாக்கிய ஆடு, விடாமல் அவரது மார்பெலும்பில் தாக்க, ஏற்பட்ட காயத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனடியாக ஆட்டை சிறைபிடித்த மக்கள், காவல் நிலையத்தில் கட்டிவைத்தனர். பின்னர் பேசிய மேஜர் எலைஜா மபோர் அதன் உரிமையாளர் குற்றமற்றவர் ஆனாலும், அந்த ஆடு செய்தது குற்றம் தான் என்றார். இதனால் அந்த ஆட்டுக்கு நிச்சயம் தண்டனை வழங்கவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாட்சியங்களின் அடிப்படையில் ஆட்டை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அந்த வெள்ளாடு 3 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஏடியு கவுண்ட்டியில் உள்ள ராணுவ முகாமில் இந்த வெள்ளாடு சிறையாக்கப்படும். மேலும், அந்நாட்டுச் சட்டத்தின் படி, ஒருவரது வீட்டில் வளர்க்கப்படும் விலங்கு மனிதரை தாக்கி கொன்றுவிட்டால், அது இறந்தவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமாகிவிடும்.
இதைத் தவிர, இறந்த அந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணமாக 5 மாடுகளை இந்த வெள்ளாட்டின் உரிமையாளர் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு 73-வயது பெண்ணும் இதுபோலவே ஆடு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.