ஜூன் மாதத்தில் கலவரம் வெடிக்கும் அபாயம்!

நாடு முற்றாக வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் பொருட்களை பெற்றுக் கொள்ள மக்கள் மத்தியில் ஜூன் மாத நடுப்பகுதியில் பாரியளவில் கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற 43 ஆவது படையணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்த அவர் ,

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற்றுக் கொள்ள மக்கள் மத்தியில் கலவரமாக தோற்றம் பெறும் வாய்ப்புள்ளது.

அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் இன்மையால் நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. நேச நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் மீள் செலுத்தப்படாது என்று ஏப்ரல் மாதம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீள் செலுத்தமல் புதிய கடன்களை பெற்று கொள்வது பொருத்தமற்றது. தற்போது இது தொடர்பாக தனது அதிருப்திகளை சீனா வெளியிட்டு இருக்கிறது.

மேலும் சீனாவிற்கு இவ்வருட இறுதி காலப்பகுதிக்குள் மொத்தமாக சுமார் 920 மில்லியன் டொலர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது.

இலங்கைக்கு உலக வங்கி தற்போது 400 மில்லியன் டொலர்களை வழங்குவதாக தெரிவித்த நிலையில் அதில் ஒரு பகுதியை கொண்டு எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யலாம். இதன் மூலம் தற்காலிகமாக இப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டாலும் மீண்டும் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் வரிசையில் நிற்கும் யுகம் தோன்றும்.

உலக சந்தையில் எரிவாயு உட்பட பல பொருட்களுக்கான விலைகள் குறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் மாத்திரம் அதிக விலைக்கு கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமையில் நாட்டு மக்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பாரியளவில் ஒரு கலவரமாக தோற்றம் பெறும். பொருட்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக் கொள்ள முடியாத மக்களால் எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த கலவரம் உருவாகும் என்பது உறுதி.

இதனால் இது கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள் சொத்துக்கள் மட்டும் அன்றி நாட்டில் உள்ள அனைவரினதும் சொத்துகளும் கொள்ளையிடப்படும்.நாடு தற்போது பாதாளத்துக்குள் தள்ளப்பட்டு விட்டது.

நாட்டுக்குகிடைக்கபெறும் டொலர்களை கொண்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு பெற்றுத் தருவதாக கூறி மக்களை ஏமாற்றுவதை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை பெற வேண்டும். சர்வ கட்சிகளையும் இணைத்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *