உலகில் ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் 10 இலட்சம் மக்கள் அதீத வறுமையில்!
ஒவ்வொரு 30 மணி நேரத்துக்கும் ஒரு கோடீஸ்வரர் உருவாகின்றனர் அதிர்ச்சியளிக்கும் ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் 10 இலட்சம் மக்கள் அதீத வறுமையில் தள்ளப்படுகின்றனர் என்று ஒக்ஸ்பாம் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று நம் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. பலருக்கு அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே பெரும் சவாலாக மாற, சிலருக்கோ செல்வம் இரட்டிப்பாக பெருகியது. கொரோனாவின் தாக்கம் பெருமளவில் தணிந்த நிலையிலும் சமூகத்தின் இந்தப் பாரபட்சம் இன்னும் ஓய்ந்தபாடாக இல்லை. இந்தச் சமநிலையின்மை, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை இன்னும் ஏழைகளாகவும் மாற்றி வருகிறது.
வறுமை ஒழிப்புக்காக இயங்கிவரும் ஒக்ஸ்பாம் அமைப்பு, இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கோவிட் பெருந்தொற்றின் கடந்த இரண்டு ஆண்டுகளில் (மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரை) ஒவ்வொரு 30 மணி நேரத்துக்கும் புதிய கோடீஸ்வரர் உருவாகியிருக்கிறார், பெருந்தொற்றுக் காலத்தில் சுமார் 573 பேர் புதிய கோடீஸ்வர்களாகி உள்ளனர். இதற்கு முரணாக 26 கோடிக்கும் அதிகமான மக்கள் அதீத வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலக அளவில் ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் 10 லட்சம் மக்கள் அதீத வறுமையில் தள்ளப்படுகின்றனர்.
வறுமையில் வாடும் 31 லட்சம் மக்களைவிட உலகின் டாப் 10 பணக்காரர்களிடம் அதிக செல்வம் இருக்கிறது. கோவிட் 19 பெருந்தொற்று, மிகப்பெரிய பொருளாதார சமத்துவமின்மையை ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. “உலக அளவிலும், அமெரிக்காவிலும் நாம் சமத்துவமின்மையின் அதிர்ச்சியூட்டும் நிலைகளை எதிர்கொள்கிறோம். இது தற்செயலானதல்ல, வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டது ” என்று ஒக்ஸ்பாம் அமெரிக்காவின் (Oxfam America) தலைவர் அப்பி மேக்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.