ஒத்துழைப்பு வழங்க தயார் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு!

யுத்தத்தினால் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு கடந்த வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தும், இம்முறை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தின் முன்பாக நினைவேந்தல் நடைபெற்றது.
இது ஒரு புதிய சமிக்கையை காட்டுவதால், இதனை அங்கீகரிக்கவேண்டுமென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலைநாட்டப்பட்ட போதும் நாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்று தெரிவித்த அவர் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதற்காக ஒத்துழைக்க தயார் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி சபை ஒன்று உருவாக்கும் யோசனையை வரவேற்ற அவர், புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதாக இருந்தால், அமைச்சுப் பதவிகளுக்காக எதிரணி எம்பிக்களை பலி எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையில் எந்த தவறும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதன்பின்னர் சிலர் ஆதரவாளர்களை தூண்டிவிடும் வகையில் உரையாற்றியதாக குற்றஞ்சாட்டினார்.

வன்முறையை தடுக்க தவறியது தொடர்பில் பொலிஸ்மா அதிபரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதம நீதியரசருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நிறுவனங்களை குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இவை தவறான முன்மாதிரிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *