கலந்து கொண்ட 75 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காத குத்துச்சண்டை வீரர் களத்தில் உயிரிழப்பு!
ஜெர்மனியைச் சேர்ந்த 38 வயதான மூசா அஸ்கன் யாமக், இதுவரை தான் கலந்துகொண்ட 75 குத்துச்சண்டைப் போட்டிகளில் தோல்வியையே சந்தித்ததில்லை. மேலும், 2019-ல் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன் குத்துச்சண்டைப் போட்டியில் சாம்பியன் பதக்கம் மற்றும் ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றவர். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ஜெர்மனியில் உள்ள மூனிச்சில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்ட மூசா யாமக், உகாந்தா வீரர் ஹாம்சா வாண்டதராவை எதிர்கொண்டு போட்டியிட்டார். அப்போது ஆட்டத்தின் 3வது சுற்றுக்கு முன் குத்துச்சண்டை வளையத்தில் மயங்கி விழுந்தார் மூசா யாமக். மயங்கி விழுந்த மூசாவை ஓடிவந்து பரிசோதித்த மருத்துவக்குழு மாரடைப்பால் மயங்கினார் என்று உறுதிசெய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே இறந்துவிட்டார்.null
மூசா யாமக்கின் இளம் வயது புகைப்படம்.
இதுபற்றி வருத்தம் தெரிவித்த துருக்கியின் தேசிய சட்டமன்ற உறுப்பினர் ஹசன் துரான், “ஐரோப்பிய மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பை வென்ற அலுக்ராவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான மூசா அஸ்கன் யாமக்கை மாரடைப்பால் இளம் வயதிலேயே இழந்தோம். அவரின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்