ராஜபக்சவினர் மறைத்து வைத்துள்ள பணத்துடன் இலங்கை வந்துள்ள வர்த்தகர்கள்!

ராஜபக்சவினரின் பணத்தை மறைத்து வைத்துள்ள இரண்டு வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 10 கோடி ரூபாய் முதல் பேரம் பேசப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ராஜித சேனாரத்ன, தன்னை அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார் எனவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும், ராஜபக்ச அரசாங்கத்தின் ஊடாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ள வெளிநாட்டில் இருக்கும் வர்த்தகர் ஒருவர், இலங்கையில் கப்பல்களில் ஆயுதங்களை வைத்திருந்த வர்த்தகரும் இணைந்து, டொலர்களில் பணத்தை கொழும்புக்கு கொண்டு வந்துள்ளனர்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அவர்கள் இந்த பணத்தை கொண்டு வந்துள்ளனர். தற்போதைய விலை 10 கோடி ரூபாய் அதாவது 100 மில்லியன் ரூபாய். நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கை சிரமமாக மாறும் போது விலை மேலும் அதிகரிக்கும்.

பணத்திற்கு பின்னால் செல்பவர்கள் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாட்டில் இருக்கும் தூய்மையான அரசியல்வாதிகள் யார் என்பது நாட்டு மக்களுக்கு நிரூபணமாகும்.

நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை பெற ரணில் விக்ரமசிங்க எனக்கு அழைப்பு விடுத்தார். உங்களுக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றதா என்று கேட்டேன் இருக்கின்றது என்றார். அப்படி என்றால் ஏன் என்னை அழைக்கின்றீர்கள் என்று கூறினேன். 114 உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லையே.

114 உறுப்பினர்கள் அல்ல 14 உறுப்பினர்களின் ஆதரவை கூட ரணிலுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இனிவரும் காலத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். மக்கள்மிகவும் விழிப்பாக இருக்கின்றனர்.

மக்கள் விழிப்பாகவும் புத்தியுடனும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ராஜபக்சவினர் இல்லாத இலங்கையை உருவாக்க வேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *