அட்டகாசமான நகரத்தை உருவாக்கும் சவுதி இளவரசர் சல்மான் தெரிவிப்பு!

வளைகுடா நாடான சவுதி அரேபியா உலகின் முதல் இலாப நோக்கமற்ற நகரத்தை உருவாக்க உள்ளது. சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த ஆண்டு நவம்பரில் இந்நகரம் குறித்து அறிவித்தார். தற்போது அந்தத் திட்டத்தின் மாஸ்டர் பிளானை வெளியிட்டுள்ளார்.

இளைஞர்களிடையே தலைமையேற்கும் பண்பை ஊக்குவிக்கவும், வளர்க்கவும் உருவாக்கப்படும் இந்த நகரம் பல சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டிருக்கும்.

இந்த நகரம் ஏன் கட்டப்படுகிறது?

இந்த நகரத்தின் பெயர் இளவரசர் முகமது பின் சல்மான் லாப நோக்கமற்ற நகரம் ஆகும். இது மத்திய சவுதி அரேபியாவின் ரியாத் மாநிலத்தில் உள்ள வாடி ஹனிஃபாவை ஒட்டிய இர்கா பகுதியில் அமைந்துள்ளது. நகரம் இயற்கை மற்றும் மனிதனை மையமாகக் கொண்டதாக இருக்கும். மேலும் மேம்பட்ட டிஜிட்டல் பெருநகரமாகவும் இயங்கும். முக்கியமாக பாதசாரிகளுக்கு ஏற்றதாக நகரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். மொத்த நிலப்பரப்பில் 44% பசுமை நிறைந்த திறந்த வெளிக்காக ஒதுக்கப்படும்.

நகரத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஹென்றி கூறுகையில்,” சவுதி அரேபிய இளைஞர்களின் திறமையை வளர்ப்பதே நகரத்தின் குறிக்கோள் ஆகும்” என்றார். இது ஒரு முதன்மையான சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுதல் மற்றும் புதுமையான, கல்வி மற்றும் ஆக்கப்பூர்வமான நிறுவனங்களை அடைவதற்கான உலகளாவிய மையமாக செயல்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நகரத்தின் தலைவர் டாக்டர் காசன் அல்ஷிபி கூறுகையில் “சவுதி பட்டத்து இளவரசரின் ஆதரவுடன் உருவாக்கப்படும் இந்நகரம் கற்றலை ஊக்குவிக்கும் நிறுவனங்களைக் கொண்டிருக்கும். சவுதி மற்றும் உலகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வண்ணம் துடிப்பான சவுதி இளைஞர்களின் திறமையை அமைப்பாக்கும் நோக்கில் லாப நோக்கமற்ற இந்நகரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மற்றும் இளைஞர்களிடையே தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதும் நகரின் நோக்கம்”, என்றார்.

நகரம் எவற்றையெல்லாம் கொண்டிருக்கும்?

மிஸ்க் என்று அழைக்கப்படும் முகமது பின் சல்மான் அறக்கட்டளை, நகரத்தின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இலாப நோக்கமற்ற நகரத்தின் எல்லைகள் மேற்கு ரியாத்தில் சுமார் 3.4 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டிருக்கும்.

சவுதி இளவரசர் ஆதரவின் கீழ் உருவாக்கப்பட்ட இந்நகரின் வணிகப் பகுதி 3,06,000 சதுர மீட்டருக்கும் அதிகமாக உள்ளது. 6,000 அடுக்குமாடி குடியிருப்புகள், 500 வில்லாக்கள் எனப்படும் தனி வீடுகள் மற்றும் நகர குடியிருப்புகள் நகரில் இருக்கும். மேலும் பொழுதுபோக்கு நிலையங்கள், உணவு, சில்லறை விற்பனை மற்றும் குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை முதன்மைத் திட்டத்தில் அடங்கும்.

இந்த நகரத்தில் கல்விக்கூடங்கள், கல்லூரிகள், மாநாட்டு மையம், பள்ளிகள், அறிவியல் அருங்காட்சியகம், அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களுக்கான ஒரு படைப்பு மையமும் இருக்கும்.

மேலும், நகரத்தில் ஒரு கலை அகாடமி மற்றும் கலைக்கூடம், கலை அரங்கம், விளையாட்டு பகுதி, சமையல் அகாடமி மற்றும் துணிகர மூலதன நிறுவனங்கள் போன்றவற்றையும் கொண்டிருக்கும்.

பட்டத்து இளவரசர் கூறியது போல், இது முதல் இலாப நோக்கமற்ற நகரமாக இது இருக்கும். மற்றும் அவரது அறக்கட்டளையின் நோக்கத்தை அடையவும் இத்திட்டம் உதவும். முஹம்மது பின் சல்மான் மிஸ்க் அறக்கட்டளையின் குறிக்கோள்கள், புதுமை, தொழில்முனைவு மற்றும் எதிர்காலத் தலைவர்களைத் தகுதிபெறச் செய்வதன் மூலம் லாப நோக்கமற்ற வேலைகளை வரையறுப்பதாகும்.

பட்டத்து இளவரசர் சல்மான், “இந்த திட்டம் நகரத்தின் சலுகைகளை அனைத்து பயனாளிகளுக்கும் வழங்குவதோடு கவர்ச்சிகரமான சூழலை உருவாக்கும் வண்ணம் சேவைகளையும் வழங்கும்,” என்றார்.

மிஸ்க் அறக்கட்டளை, ஒரு தொண்டு நிறுவனம்

2011 ஆம் ஆண்டில், இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக இளைஞர்களிடையே கற்றல் மற்றும் தலைமைப் பண்பை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மிஸ்க் அறக்கட்டளையை நிறுவினார். இது ஒரு இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகும். இது கல்வி மற்றும் தொழில்முனைவு மூலம் இளைஞர்களை மேம்படுத்த உதவுகிறது. இதற்கான மையங்களை உருவாக்குவதன் மூலம் வணிகம், இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறைகள், சமூக மற்றும் தொழில்நுட்ப அறிவியல் ஆகியவற்றை கற்கவும், மேம்படுத்தவும் முன்னேறவும் இது உதவுகிறது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் யார்?

1985 இல் பிறந்த முகமது பின் சல்மான், சவுதி அரேபியாவின் உண்மையான ஆட்சியாளராக கருதப்படுகிறார். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்குதல் மற்றும் பொருளாதாரத்தை பன்முகப்படுத்துதல் உள்ளிட்ட சில சீர்திருத்தங்களுக்கு அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

2009 இல், அவர் தனது தந்தையின் சிறப்பு ஆலோசகரானார் (அப்போது அவர் ரியாத் கவர்னராக இருந்தார்). இதற்கு முன், அவர் பல்வேறு மாநிலத் துறைகளிலும் பணியாற்றினார்.

2013 ஆம் ஆண்டில், சல்மான், பட்டத்து இளவரசர் நீதிமன்றத்தின் தலைவராகவும், கூடவே அமைச்சர் அந்தஸ்துடன் நியமிக்கப்பட்டார். அவரது அரசியல் செயல்களில் மார்ச் 2015 இல் மற்ற அரபு நாடுகளுடன் சேர்ந்து யேமனில் ஒரு இராணுவ படையெடுப்பைத் தொடங்கியதும் அடங்கும்.

எதேச்சதிகாரமாக ஆட்சி செய்யும் சல்மான், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையாளரான ஜமால் கஷோகியின் படுகொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சவுதி அரசை விமர்சித்ததால் கஷோகி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு இளவரசர் சல்மான் விஷன் 2030 ஐ அறிமுகப்படுத்தினார். இதில் நாட்டின் எண்ணெய் வருவாயை சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதோடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கு உகந்த நாடாய் சவுதியை மாற்றவும் செய்தார்.

இதன் அங்கமாகவே இந்த பிரம்மாண்டமான இலாப நோக்கமற்ற நகரமும் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆட்சியமைப்பில் சர்வாதிகாரத்தை கொண்டிருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு இந்த இளவரசர் பெரும் திட்டங்களை அமல்படுத்தி வருகிறார் என்று சவுதி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *