மரண திகதியை ஓராண்டுக்கு முன்னரே குறிப்பிட்டு தீக்குளித்த பிரபலம்!

அமெரிக்காவில் பருவகால செயற்பாட்டாளர் ஒருவர் தனது மரண திகதியை ஓராண்டுக்கு முன்னரே குறிப்பிட்டு தீக்குளித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே பூமி நாளான கடந்த 22ம் திகதி குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கொலராடோ பகுதியை சேர்ந்த 50 வயதான Wynn Bruce என்ற பருவகால செயற்பாட்டாளரே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர். சம்பவத்தன்று மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 6.30 மணியளவில் குறித்த நபர் தன் மீது திடீரென்று தீ வைத்து கொண்டுள்ளார்.

தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், அடுத்த நாள் சனிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

முதற்கட்ட விசாரணையில் Wynn Bruce தமது பெயரிலான பேஸ்புக் பக்கத்தில் தம்மை ஒரு புத்த மதத்தினை சேர்ந்தவர் என்றும் பருவகால செயற்பாட்டாளர் எனவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரிலேயே பேஸ்புக் பதிவு ஒன்றில் தீ பற்றிய எமோஜி ஒன்றையும், 4/22/2022 என்ற அவரது மரண நாளையும் குறிப்பிட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதுபற்றி புத்த மத பெண் சாமியாரான கிரித்தீ கன்கோ தெரிவிக்கையில், புரூசை தமக்கு தெரியும். அவர் தம்முடைய நண்பர். இது தற்கொலை அல்ல. பருவகால நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக புரூஸ் மேற்கொண்ட இரக்கத்துடன் கூடிய அச்சமற்ற செயல் என்று தெரிவித்து உள்ளார்.

ஆனால், புரூசின் பேஸ்புக் பக்கத்தில் அவரது தற்கொலை முடிவை பலர் பாராட்டியிருந்தாலும், அதே எண்ணிக்கையிலான மக்கள் கடுமையாக விமர்சனமும் முன்வைத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *