ராஜபக்ச குடும்பத்தினர் அவசர சந்திப்பு ஜனாதிபதி கோத்தபாய புறக்கணிப்பு?

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ராஜபக்ச குடும்பத்தினர் இடையில் இன்று முற்பகல் விசேட சந்திப்பு நடந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தினர் மூத்தவரான சமல் ராஜபக்சவின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதன் போது நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை சம்பந்தமான விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புகள், எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஆகியன காரணமாக மக்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மக்களின் போராட்டம் ஆரம்பமான சூழ்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரை தவிர அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜபக்சவினர் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்தனர். புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையிலும் ராஜபக்சவினர் எவரும் இடம்பெறவில்லை.

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வழிவிட வேண்டும் என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,  ராஜபக்ச குடும்பத்தினர்  இடையில் இந்த பேச்சுவார்த்தை நடத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *