ஒற்றுமை என்ற கயிறை இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள்!
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்ற தமிழ் பழமொழியை எடுத்துக் காட்டி ஒற்றுமை என்ற கயிறை இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள். அதனை கைவிட்டு விடாதீர்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்ற தமிழ் பழமொழி , ‘மிகவும் பலவீனமான கயிறு கூட ஒன்றாகக் கட்டப்பட்டால் பலமானதாகிவிடும்.’ என்பதைக் கூறுகிறது. அடம்பன் என்பது கடற்கரையில் இருக்கும் கால்விரல்களில் பிடிபட்டால் கூட உடைந்துவிடும் அளவுக்கு வலுவிழந்த கொடி வகையாகும்.
கொடியும் என்பது கொடிகளைக் குறிக்கிறது. திரண்டால் என்பது ஒன்றாக இணைவதைக் குறிக்கிறது. மிடுக்கு என்பது வலிமையானதாகும். இதனை சிங்களத்தின் ஒற்றுமையின் சக்தியாகக் கருதலாம். இதே போன்ற பொருள் கொண்ட ஒரு வாசகம் திரு குர்ஆனிலும் காணப்படுகிறது.
அதற்கமைய ‘ஒற்றுமை என்ற கயிற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விடாதீர்கள்’ என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை ரீதியான போராட்டம் இன்று வரை தொடரும் நிலையில் இவ்வாறு பதிவொன்றினை இட்டுள்ளார்.