உலகை நடுங்க வைத்த செங்கிஸ்கான் கல்லறை ஒரு மர்ம வரலாறு!

செங்கிஸ்கான் வரலாற்றில் மிகவும் பிரபலமான அரசர்களில் ஒருவர். மங்கோலியப் பேரரசின் நிறுவனர். மற்றும் முதல் கிரேன் கான் என்றும் அழைக்கப்பட்டார். அவரது காலத்தில் பசிபிக் பெருங்கடல் முதல் காஸ்பியன் கடல் வரை நீண்டிருந்த நிலப்பரப்பை ஆண்டார்.

வடகிழக்கு ஆசியாவின் பல நாடோடி பழங்குடியினரை ஒன்றிணைத்து தன்னை மங்கோலிய ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் செங்கிஸ்கான் மங்கோலியப் படையெடுப்புகளைத் தொடங்கினார். இறுதியில் யூரேசியாவின் பெரும்பகுதியை அவர் கைப்பற்றினார். அவரது மரணத்திற்கு பிறகு மங்கோலியப் பேரரசு வரலாற்றில் மிகப்பெரிய பேரரசாக மாறியது.

செங்கிஸ்கான் குதிரையில் இருந்து விழுந்து அல்லது போரில் ஏற்பட்ட காயங்களால் இறந்திருக்கலாம். அவரது பழங்குடியினரின் பழக்க வழக்கங்களின்படி, அவரை ரகசியமாக அடக்கம் செய்யுமாறு சாவதற்கு முன்பு அவர் கேட்டுக் கொண்டார்.

செங்கிஸ்கான் இறந்த பிறகு துக்கமடைந்த அவரது இராணுவம் அவரது உடலை இரகசியமாக மங்கோலியாவிற்கு எடுத்துச் சென்றது. வழியில் கண்டவர்களை இரகசியம் காக்கும் பொருட்டு கொன்றது. அவரது கல்லறை யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கூடச்சென்ற இராணுவத்தினர் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர். இரகசியம் வெளியே கசியக்கூடாது என்பதற்காக சவாரி செய்த 1000 குதிரைகளையும் புதைத்தனர்.

இன்று 800 வருடங்கள் கழித்தும் எவரும் ஜெங்கிஸ்கானின் கல்லறை எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது கல்லறை இடம் புராதான உலகின் அறியமுடியாத மர்மமாக இன்றும் நீடிக்கிறது.

கல்லறையைப் பின்தொடர்தல்
செங்கிஸ்கானின் கல்லறை எங்கு உள்ளது என்பதற்கு பல புராணக்கதைகள் உள்ளன. அவரது கல்லறையைக் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு நதி திசை திருப்பப்பட்டதாக ஒருவர் கூறுகிறார். அது நிரந்தரமாக ஊடுருவ முடியாதபடி எங்கோ பெர்மாஃப்ரோஸ்ட் என்றழைக்கப்படும் கடும் பனி நிலவும் உறைந்த நிலத்தில் புதைக்கப்பட்டதாக மற்றொருவர் கூறுகிறார். மற்ற கூற்றுக்கள் அவரது சவப்பெட்டி மங்கோலியாவிற்கு வந்த நேரத்தில் ஏற்கனவே காலியாக இருந்தது என்று கூறுகின்றன.

மர்மத்தின் வெளிச்சத்தில், வரலாற்றாசிரியர்கள் மற்றும் புதையல் வேட்டைக்காரர்கள் மத்தியில் இயற்கையாகவே கல்லறை இருக்கும் இடம் பற்றிய ஊகங்கள் பெருகியுள்ளன. ஜெங்கிஸ்கானின் கல்லறையானது பண்டைய மங்கோலியப் பேரரசு முழுவதிலும் இருந்த பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது என்று சிலர் நம்புகிறார்கள். மற்றும் கல்லறையானது ஜெங்கிஸ்கானைப் பற்றியும் அவரைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும் விரிவான தகவல்களை வழங்கும் என்று கருதப்படுகிறது.

வல்லுநர்கள் வரலாற்று நூல்கள் மூலமாகவும், நிலப்பரப்பு முழுவதையும் அகழ்வாராய்ச்சி செய்வதன் மூலமாகவும் கல்லறையின் இருப்பிடத்தைக் கண்டறிய முயன்றனர். அவரது உடல் கென்டி அய்மாக்கில் அவரது பிறந்த இடத்திற்கு அருகில் எங்காவது வைக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக சந்தேகிக்கப்படுகிறது. இது ஓனான் நதி மற்றும் கென்டி மலைத்தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் புர்கான் கல்துன் மலைக்கு அருகில் இருக்கலாம்.

விண்வெளியில் இருந்து கூட கல்லறையை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. நேஷனல் ஜியோகிராஃபிக்ஸின் வேலி ஆஃப் தி கான்ஸ் திட்டம் கல்லறைக்கான தேடுதல் ஆய்விற்காக செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *