ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் பன்னீர் செல்வம், இளவரசி ‌வாக்குமூலம்!

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்தோ, சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் குறித்தோ தனக்கு எதுவும் தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்திடம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ( அ.தி.மு.க)  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராக அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை ஆணையத்தின் முன்பாக இருவரும் இன்று (21)  ஆஜராகியிருந்தனர்.

விசாரணை ஆணையத்தின் முன் முதல்முறையாக அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அப்போது அவரிடம் ஆணையத்தின் சார்பில், ’மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியுமா?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ’மறைந்த ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருந்ததை தவிர அவருக்கு இருந்த வேறு உடல் உபாதைகள் பற்றி தெரியாது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி மருத்துவமனையில் எதற்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது.

அந்தசமயம் நான் எனது சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவு நேரத்தில் எனது உதவியாளர் மூலமாகவே, ஜெயலலிதா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை தெரிந்துகொண்டேன். அடுத்தநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த அப்போதைய தலைமைச் செயலாளரிடம் விவரங்களை முழுமையாக கேட்டறிந்தேன்’ என்றார்.

’விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார்? விசாரணை ஆணையம் அமைக்க முடிவு செய்தது யார்?’ என்று ஆணையத்தின் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ’பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதல்வர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டேன்.  மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக, மெட்ரோ ரயில் நிகழ்ச்சியல் ஜெயலலிதாவை பார்த்தேன். அதன்பிறகு நான் அவரை பார்க்கவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராகியிருந்த இளவரசி, “ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வந்த அப்போலோ மருத்துவமனைக்கு 75 நாட்களும் சென்றபோதும், ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன். கடந்த 2014 ஆம் ஆண்டில் சிறைக்கு சென்றபோது ஜெயலலிதா மன உளைச்சலில் இருந்தார். அதேபோல், கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அவர் உடல்நல்குறைவுடன் இருந்தார்.   மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வந்தபோது, சசிகலா மட்டுமே அவருடன் இருந்து பார்த்துக் கொண்டார் ” என்று தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *