சர்வதேச போட்டிகளில் இருந்து விலக விராட் கோலி முடிவு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு கடந்த 3 ஆண்டுகளாக சோதனைக் காலமாகவே  அமைந்தது என்று சொல்லலாம். கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோலி  சதம் அடிக்காமல் இருந்து வருகிறார்.

அதேசமயம் தனது கேப்டன்சியில் எந்தவொரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில் மூன்று வகையான கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து அவர் வெளியேறினார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்து வந்த பெங்களூரு அணி இதுவரை கோப்பை வென்றதில்லை என்பதால் கடந்தாண்டுடன் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்நிலையில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடி வந்தாலும் இன்னும் விராட் கோலி தனது 71வது சதத்தை அடிக்காமல் தாமதித்து வருகிறார். இதன் காரணமாக பேட்டிங் பார்ம் மீது அவர் இன்னும் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சுமாராகவே விளையாடியதால் கோலி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்குப் பின் விராட் கோலி டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாட போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்து இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

அந்த தொடரில் இருந்து வெளியேறும் விராட் கோலி டெல்லி அணிக்காக இரண்டாம் பாதி ரஞ்சி டிராபியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் ரஞ்சி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் பழைய பார்ம்முடன் திரும்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.  இந்த தகவலால் விராட் கோலி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *