திருமண நிகழ்வில் கணவனை கொலை செய்த மனைவியின் முன்னாள் கணவன்!

கொம்பனித்தெரு – டோசன் வீதியில் நடந்த திருமண நிகழ்வில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மணமகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில், மணமகளின் மூத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றிய 51 வயதான மொஹமட் ஷயாபிதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது திருமணத்தை 16ஆம் திகதி பதிவு செய்துவிட்டு, நேற்று இரவு வீட்டில் திருமண வைபவத்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, இரவு 10.00 மணியளவில் திருமண நிகழ்ச்சிக்கு ​வந்த மணமகளின்  முன்னாள் கணவர், மணமகனிடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மணமகன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து சந்தேகநபர் தப்பியோடிய நிலையில், இன்று காலை கொம்பனித்தெரு பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை – சொய்சாபுர பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணே மணமகளாவார். இவருடைய முதல் திருமணத்தில் அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *