கைத்தொலைபேசியில் சத்தமாகப் பேச,பாட்டுக் கேட்கத் தடை!

அரச பஸ்களில் பயணிக்கும் பயணிகள் சத்தமாகக் கைத்தொலையேசியில் பேசவோ, அல்லது பாட்டுக்கேட்கவோ கூடாது என கேரள அரசு  உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தொலைபேசியில் சத்தமாக பேசுவது, பாடல் கேட்பது போன்ற சக பயணிகளைத் தொந்தரவு செய்யும் செயல்களுக்கு தடை விதித்தது.

இந்நிலையில் கேரளாவில்  அரச பஸ்களில்  பயணம் செய்யும் பயணிகள் தொலைபேசியில் சத்தமாக பேசுவதாகவும், இதனால்  சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக  கேரள அரச போக்குவரத்துச் சபையினருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்றைய தினம்  ( 19) கேரள அரசு, அனைத்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றைப்  பிறப்பித்துள்ளது.

குறித்த உத்தரவில் ” கேரளாவில் அரச பஸ்களில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக தொலைபேசியில் பேசவோ, பாட்டு கேட்கவோ  கூடாது எனவும், அவ்வாறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவரை பற்றிய தகவல் தெரிவிக்க வசதியாக இந்த அறிவிப்பை அனைத்து பஸ்களின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *