இலங்கை மீண்டும் முடக்கப்பட்டால் மாதச் சம்பளம் பெறுவதில் நெருக்கடி ஏற்படும்!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து நாடு முடக்கப்படுமானால் மாதாந்த சம்பளம் பெறுவோர் கூட நெருக்கடிக்கு ஆளாவர் என சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலைக்கு நாட்டைக் கொண்டு வருவதை தடுக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கே உள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர், சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி முழுமையான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டால் அத்தகைய நிலையைத் தவிர்க்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் எந்த கொரோனா வைரஸ் பரவல் இடம்பெறுகிறது என சிந்திக்காமல் சுகாதார பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயற்படவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள அவர், பெரும்பாலானவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தியுற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் பரப்பப்பட்டு வரும் பல்வேறு கருத்துக்களை வைத்துக் கொண்டு சிலர் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அசமந்தம் காட்டி வருவதை காண முடிவதாக குறிப்பிட்டுள்ள அவர்,அவ்வாறான தவறான கருத்துக்களுக்கு அகப்பட வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நான்கு மாதங்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் நாட்டில் 942 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பிட்டுள்ள அவர், ஒமிக்ரோன் திரிபு வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவும் நிலையில் முறையான சுகாதார வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்றுவது முக்கியம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கோ சென்று தமக்கான தடுப்பூசியைப்பெற்றுக் கொள்ளுமாறும் அவர் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *