திருமணம் செய்யும் போது ஏன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டும்?
வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை இலங்கையர்கள் பதிவுத்திருமணம் செய்து கொள்ளும் போது ஏன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை என்பது குறித்து அரச தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்ட நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர் கீதானாத் காசிலிங்கம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கைப் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டுப் பிரஜைகள் சிலர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம், சமூக ஊடகங்களின் ஊடான சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளிட்டனவற்றை இவ்வாறானவர்கள் மேற்கொள்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
வறிய பெண்கள் இவ்வாறான குற்றவாளிகளினால் இலக்கு வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழு அறிக்கையிலும் இவ்வாறான திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் பிரஜைகளை திருமணம் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை அமுல்படுத்த வேண்டுமென அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்யவும், உள்நாட்டுப் பிரஜையின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டும் உலகின் பல நாடுகளில் இவ்வாறு வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கும் நடைமுறை அமுலில் உள்ளது என காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.