பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பாம்பு கடி!
நடிகர் சல்மான் கான் தன்னைக்கு சொந்தமான பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்ற போது அங்கு அவருக்கு பாம்பு கடித்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சல்மான் கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் தற்போது இந்தி பிக்பாஸ் 15வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவருக்கு மகாராஷ்டிரா ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் என்ற இடத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. கொரோனா காலத்தில் இந்த வீட்டில் இருந்து கொண்டு விவசாய, தோட்டப் பணிகளை சல்மான் கான் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 3 மணிக்கு சல்மான் கானை, பாம்பு திடீரென்று கடித்ததால், உடனடியாக அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு விஷ முறிவு மருந்தைக் கொடுத்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாரூக்கான் நடிக்கும் பதான் என்ற படத்தில் சல்மான் கான் கவுரவ தோற்றத்தில் இடம்பெறவுள்ளார். இதற்கிடையில் பாம்பு கடிக்கு சல்மான் கான் ஆளாகியிருப்பது இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.