பெளத்த விகாரையில் தலைமை பிக்கு உட்பட 9 பேருக்கு கொரோனா!
நாவலப்பிட்டி, பவ்வாகம பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவெனா ஒன்றில் பிக்குகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த விகாரையின் தலைமை பிக்கு உள்ளிட்ட 9 பேருக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொரலே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் லலித் கொலமுன்ன தெரிவித்தார்.
குறித்த பிரிவெனாவில் கல்வி பயிலும் நான்கு பிக்குகளுக்கு கடந்த 29 ஆம் திகதி கொவிட் அறிகுறிகள் தென்பட நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் விகாரையின் தலைமை பிக்கு உள்ளிட்ட ஏனைய பிக்குகளிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது மேலும் 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
பின்னர், தொற்றுக்குள்ளான தலைமை பிக்கு சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தொற்றுக்குள்ளான ஏனைய பிக்குகளும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய பிக்குகளும் பிரிவெனாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.