அவுஸ்திரேலியாவின் ‘Woman of the Year’ கெளரவத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கைப் பெண்!

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டதற்கு எதிராக போராடியவர் தான் பிரியா நடேஸன். புகலிடக்கோரிக்கைக்காக நடேசலிங்கமும் பிரியாவும் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தனர்.

அவுஸ்திரேலியாவிலுள்ள கிறிஸ்மஸ் எனும் தீவில் பிரியா நடேஸனும் அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் அவரது மகள்களான தருணிகா , கோபிகா ஆகிய இருவரும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து இவர் நாடு கடத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதன் காரணமாகவே பிரியா நடேஸனும் அவரது குடும்பமும் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2018ஆம் ஆண்டு ஆரம்பப் பகுதியில் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் காலாவதியாகிவிட்டதையடுத்து நாட்டை விட்டு வெளியேற்றும் அவசர நடவடிக்கையை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை மேற்கொண்டது.

பிரியா நடேஸனின் குடும்பம் பல ஆண்டு காலமாக குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியில் இருந்துவந்த நிலையில், 2018 இல் பலவந்தமாக அவர்களை நாடுகடத்த முற்பட்டனர். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இச் சட்டநடவடிக்கையை நிறைவேற்ற முடியாத காரணத்தால் இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இவர்கள் நாடு கடத்தப்படகூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 ஆம் திகதி மெல்பன் பெடரல் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இவர்களை நாடு கடத்தவேண்டுமென்ற நடவடிக்கையில் தீவிரமாய் இருந்த குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. இருப்பினும் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக பிரியா நடேஸன் மேன்முறையீடு செய்ததால் மற்றமொரு முறை அவர்களின் நாடுகடத்தல் நடவடிக்கை நிறைவேற்றப்படவில்லை.

2018 டிசம்பர் 21ம் திகதி இவர்களின் மேன்முறையீட்டு மனுவை விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்து இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இம்முறையும் நாடுகடத்தப்படவிருந்த நடவடிக்கை தடைப்பட்டது.இப்படி கிட்டதட்ட ஒன்றரை வருடங்களாக இக்குடும்பம் மெல்பனிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கையை எப்படியாவது அவுஸ்திரேலிய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என்று போராடிய ஒரு தைரியமான பெண்ணாக பிரியா நடேஸன் இப்பொழுது அனைவராலும் புகழப்பட்டுவருகிறார். ஈழத்தைச் சேர்ந்த இவர்களின் புகலிடக்கோரிக்கைக்காக அவுஸ்திரேலியாவின் பல தரப்புகளிலிருந்தும் உதவிக்கரம் நீட்டப்பட்டது.

தனது குடும்பத்தின் புகலிடக்கோரிக்கைக்காக போராடியதற்காக அவுஸ்திரேலியாவின் முக்கிய மகளிர் சஞ்சிகையான Marie Claire, பிரியா நடேசனுக்கு ”Women Of The Year” என்ற கௌரவத்தை வழங்கி கௌரவித்தது. விடுதலைக்காக போராடிய சாதனைப்பெண்ணாக ஈழத் தமிழ் பெண் பிரியா நடேஷன் திகழ்கிறமை அவரின் தைரியத்தையும், விடாமுயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது. அவுஸ்திரேலியாவில் அவரும் ஒரு சாதனைப்பெண்ணாக மக்களால் புகழப்பட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *