டொலர் பெறுமதி 300 ரூபாவைத் தாண்டும் ரணில் எச்சரிக்கை!
தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவது ஏனைய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்கான உத்தரவாதமாகவே பார்க்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் சுமார் 6 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) செல்வதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நிபந்தனைகள் திணிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்டால் அமெரிக்க டொலரின் பெறுமதி சுமார் 240 ரூபாவாகவே இருக்கும் எனவும், இல்லையெனில் அமெரிக்க டொலரின் பெறுமதி சுமார் 300 ரூபாவாக உயரும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான இணையவழி கலந்துரையாடலின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.