இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பன்றி, மாட்டிறைச்சி வழங்கத் தடை?

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பன்றிக்கறி, மாட்டிறைச்சி வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பிசிசிஐ மறுத்துள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நாளை முதல் (நவம்பர் 25) தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பன்றிக்கறி, மாட்டிறைச்சி வழங்க பிசிசிஐ தடை விதித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. பன்றிக்கறி, மாட்டிறைச்சியை எந்தவிதமான உணவு வடிவிலும் உட்கொள்ளக்கூடாது. ஹலால் இறைச்சிகளை மட்டுமே உண்ண வேண்டும் என வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடு விதித்ததாகச் செய்திகள் வெளியாகின. இதனால் சமூகவலைத்தளங்களில் பிசிசிஐக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் இந்தச் சர்ச்சைக்கு பிசிசிஐ பதில் அளித்துள்ளது. ஆங்கில ஊடகத்துக்கு பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால் கூறியதாவது:

வீரர்களின் உணவுக்குறிப்பு குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. உணவு தொடர்பாக எதையும் வீரர்களிடம் கட்டாயப்படுத்த மாட்டோம். உணவு குறித்து வீரர்களே தனிப்பட்ட முறையில் முடிவெடுத்துக்கொள்வார்கள். இதில் பிசிசிஐ தலையிடுவதில்லை. எந்த உணவைச் சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்பது அவர்களுடைய முடிவு எனப் பதில் அளித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *