அரசின் அசட்டையே படகு விபத்துக்குக் காரணம் ஹக்கீம் குற்றச்சாட்டு!
கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் இன்று இடம்பெற்ற படகு விபத்தானது, அரசின் அசட்டை காரணமாகவே நடந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. சபையில் சுட்டிக்காட்டினார்.
குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்து தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் இன்று சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.இதன்போது, அரசின் அசட்டை காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
மேலும், முறையான வகையில் அந்தப் படகு பாதை சேவை நடைபெறவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றியே கிண்ணியாவில் இந்தத் தரமற்ற தற்காலிக படகுப் பாதை இயங்கியுள்ளது எனவும், இது தொடர்பில் உடனடி விசாரணை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.இதேவேளை, கிண்ணியா படகு பாதை குறித்து பல தடவைகள் சுட்டிக்காட்டியபோதும் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என இம்ரான் மஹ்ரூப் எம்.பி. தெரிவித்தார்.