சோமாலியாவில் நிலவும் வரட்சியால் உணவு, நீரின்றி 23 இலட்சம் பேர் பரிதவிப்பு!
ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் நிலவும் கடும் வரட்சி காரணமாக சுமார் 23 இலட்சம் பேர் போதிய உணவு, குடிநீர் இன்றி அவதியுற்று வருவதாக ஐ,நா. சபை தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் தொடர்ந்து நான்காவது வருடமாக இந்த ஆண்டும் போதியளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் நீர் நிலைகளில் அதிவேகமாக நீர் குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது.
இதனால் இங்கு சுமார் 23 இலட்சம் வரையான மக்கள் போதிய உணவு மற்றும் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் தங்களுக்கும், தங்கள் கால்நடைகளுக்கும் போதிய உணவு, குடிநீர் கிடைக்காததால் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர் எனவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, வரட்சி நீடிக்குமானால் அடுத்த ஆண்டு, சுமார் 80 லட்சம் பேர் உணவுப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சோமாலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக போர்கள் நடந்து வருகின்றன. அத்துடன், கடுமையான வறட்சி, வெள்ளம், பூச்சிகள் பயிரை அழிப்பது போன்ற பிரச்சனைகளையும் அந்நாடு எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.