ஆடைக்கு மேல் தொட்டாலும் அது பாலியல் குற்றம் தான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

கடந்த 2016-ல் 12 வயது சிறுமியிடம் 39 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அன்று ஒரு தீர்ப்புளித்தது.

அதில், ‘பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது’ என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்புச் சட்டத்தை மேற்கோள்காட்டி, அந்த நபரை விடுதலை செய்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கொண்டு சென்றார்.

மும்பை உயர்நீதிமன்றக் கிளையில் இந்த தீர்ப்பானது, இடையூறு ஏற்படுத்துவதாகவும், ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அப்போதைய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், உயர்நீதிமன்ற கிளையானது, பாலியல் இச்சையுடன் உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது எனக்கூறி குற்றவாளி விடுவிக்கப்பட்டதை எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்தனர்.

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், உயரநீதிமன்ற கிளையின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதித்தனர்.

இந்நிலையில், ‘தொடுதல் என்ற சொல் பாலியல் தொடர்பை குறிக்கும்; அது ஆடைக்கு மேல் இருந்தாலும் பாலியல் சீண்டல்தான், போக்சோ சட்டத்துக்குள்தான் வரும்’ எனக்கூறி சிறுமிகளை ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ போட முடியாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *