மக்கள் உதாசீனமாக நடந்து கொண்டதன் விளைவாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கடந்த 10 நாட்களுக்குள் உதாசீனமாகவும் கவனயீனமாகவும் நடந்து கொண்டதன் விளைவாகவே தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளரான சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கோவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான வழிகாட்டல்கள் தொடர்பில் கடந்த 10 நாட்களுக்குள் உதாசீனமாகவும் கவனயீனமாகவும் நடந்து கொண்டதன் விளைவாகவே இத்தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
அவ்வாறு நடந்து கொண்டவர்கள் தான் தொற்றாளர்களாக அடையாளமும் காணப்படுகின்றனர். இதனை இப்போதே கட்டுப்படுத்தத் தவறினால் நிச்சயம் இத்தொற்று தீவிரமடைய முடியும். நாளொன்றுக்கு 5,000 பேர் படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலைமை ஏற்பட்டால் தினமும் 50 ஆயிரம் தொற்றாளர்களை முகாமை செய்ய வேண்டிய நிலைமை எமக்கு ஏற்படும்.
அதேபோன்று நாளொன்றுக்கு 6,000 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படும் நிலைமை ஏற்பட்டால் 60 ஆயிரம் தொற்றாளர்களை முகாமை செய்ய வேண்டிய நிலைமை எமக்கு உருவாகும்.
இத்தொற்றாளர்கள் ஒவ்வொருவரையும் பத்து நாட்கள் வைத்தியசாலைகளில் தங்க வைத்திருக்க வேண்டும்.
ஆனால் நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் 80 ஆயிரம் கட்டில்கள் தான் மொத்தமாக உள்ளன. அப்படியென்றால் 80 ஆயிரம் கட்டில்களையும் இத்தொற்றாளர்களுக்காகவே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
அதனால் தற்போது நாளொன்றுக்கு 500, 600 என்ற படி பதிவாகும் தொற்றாளர்களை 400, 300 என்றபடி குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.