வெள்ளத்துக்கு மத்தியில் கல்யாண சீர்வரிசை கொண்டு சென்ற பெண்கள்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து இன்று பல மாவட்டங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, எனவே மக்கள் கவனமுடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் ஆற்றின் இடுப்பளவு தண்ணீருக்கு மத்தியிலும் பெண்கள் கல்யாண சீர்வரிசை கொண்டு செல்லும் காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளன.
விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி- நெடுஞ்சேரி இடையே வெள்ளாறு செல்கிறது.
தே.பவழங்குடி, கீரமங்கலம் உட்பட பல்வேறு கிராமத்தினர் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஆற்றை கடந்து செல்ல வேண்டும், தண்ணீர் இல்லாத நேரத்தில் தற்காலிக பாதை வழியாக மக்கள் செல்வது வழக்கம்.
தற்போது மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் பவழங்குடி கிராமத்தில் உள்ள மக்கள், அவர்கள் ஊரில் ஒருவரின் திருமணத்திற்காக சென்றனர்.
ஸ்ரீ நெடுஞ்சேரி பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் பவழங்குடி கிராமத்திற்கு வருவதற்காக இடுப்பு அளவு தண்ணீரில் சீர்வரிசை சாமான்கள் எடுத்துச் சென்றனர்.
இதில் சில பெண்கள் தங்களது குழந்தைகளை கையில் பிடித்தபடியும், கையில் தூக்கி வைத்து கொண்டும் செல்லும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஆற்றில் தண்ணீர் மேலும் பெருக்கெடுத்து ஓடும் பட்சத்தில் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது