அறிமுகம் இல்லாத பெண்ணுடன் வாட்ஸ்அப் மெசேஜ் ரூபா 5 இலட்சத்தை இழந்த நபர்!

பெங்களூருவில் வாட்ஸ்அப்பில் ‘குட் மார்னிங்’ செய்திகளைத் தொடர்ந்து அனுப்பிய அறிமுகம் இல்லாத நபரைச் சந்திக்க சென்ற 50 வயது நபரிடமிருந்து ரூ.5 லட்சத்தை 3 மர்ம நபர்கள் ஏமாற்றி பறித்தனர்.

பெங்களூரு, கோவிந்தபுரா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின்படி “50 வயதுடைய நபர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து தொடர்ந்து ‘குட் மார்னிங்’ செய்திகளைப் பெற்று வந்துள்ளார். கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, அந்த பெண் தனது இருப்பிடத்தையும் அவருக்கு அனுப்பியிருக்கிறார், அன்று இரவு வீரணபாளையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் அந்த பெண்ணை பார்க்கச் சென்றபோது, அந்த அறைக்குள் மொத்தம் மூன்று பேர் இருந்தனர்.

அப்போது அந்த மூன்று பேரும் தங்களை போலீஸ்காரர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, இவரை போதைப்பொருள் கடத்தல்காரர் என்றும் குற்றம் சாட்டினார்கள். பிறகு அவரிடமிருந்து கிரெடிட் கார்டு, பர்ஸ் மற்றும் தொலைபேசியை பறித்துக்கொண்டு, அவரை அறைக்குள் பூட்டிவிட்டு ஹோட்டலை விட்டு தப்பிசென்றார்கள். அதன்பின்னர் ஐந்து பரிவர்த்தனைகளில் ரூ.3,91,812 அவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மேலும் ரூ.2 லட்சம் எடுக்கப்பட்டதாக அவருக்கு செய்தி வந்தது” என்று தெரிவிக்கப்பட்டது.

புகார் அளித்தவரின் தகவலின் அடிப்படையில், ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர், மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *