தொடர் வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்!

அபுதாபியில் நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின், 31-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ஓட்டங்கள் குவித்தது.

பாகிஸ்தான் அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசம் 49 பந்துகளில் 70 ஓட்டங்களும், முகமது ரிஸ்வான் 50 பந்துகளில் 79 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து, 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.

வெற்றி பெற வாய்ப்பில்லை என தெரிந்த பிறகும் முடிந்த வரை முயற்சித்து பார்த்தது நமீபியா அணி.

நமீபியா தரப்பில் அதிகபட்சமாக டேவிட் வெய்ஸ் 43 ஓட்டங்களும், க்ரெய்க் வில்லியம்ஸ் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனால் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *