பைசர்,அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத’ஏ.30′ கொரோனா பிறழ்வு!

பைசர், அஸ்ட்ராசெனிகா உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத ‘ஏ.30’ (A.30) என்ற புதிய வைரஸ் பிறழ்வு சில நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் , குறித்த பிறழ்வு இலங்கையில் நுழையாதிருப்பது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

குறித்த வைரஸ் பிறழ்வு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த வைரஸ் பிறழ்வு உலக நாடுகள் சிலவற்றில் இனங்காணப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த பிறழ்வானது பைசர் , அஸ்ட்ராசெனிகா உள்ளிட்ட முன்னிலை தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாது என்பது புதிய கண்டு பிடிப்பாகும்.

இந்த தடுப்பூசிகளால் கிடைக்கப்பெற்றுள்ள பாதுகாப்பானது இந்த பிறழ்வின் மூலம் முழுமையாக இல்லாமலாக்கப்படலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா என்பன விசேட அவதானம் செலுத்தியுள்ளன.காரணம் அந்நாடுகளில் நிலவும் குளிர் காலநிலையில் இந்த பிறழ்வு பரவத்தொடங்குமாயின் பாரிய நெருக்கடிகளை அந்நாடுகள் எதிர்கொள்ள நேரிடும்.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் நாமும் அவதானத்துடன் இருக்கின்றோம். கொவிட் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என்று எண்ணி , கொவிட்டுக்கு முன்னரான வாழ்க்கைக்கு செல்வோமாயின் எதிர்வரும் 4 வாரங்களின் பின்னர் அதன் பிரதிபலனை எம்மால் அனுபவிக்க நேரிடும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *