மாலைதீவை விடவும் இலங்கை கீழ் மட்டத்தில் திஸ்ஸ தெரிவிப்பு!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அந்நிய செலாவணி இருப்பு மறை பெறுமானத்திற்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.

மாலைதீவினை விடவும் கீழ் மட்டத்திற்கு இலங்கை சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

உண்மையில் தற்போது அரசாங்கமும் இல்லை. ஜனாதிபதியும் இல்லை. வர்த்தக மாபியாக்களே நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு சிறந்த உதாரணம் திரும்பி சென்ற சீன உர கப்பல் மீண்டும் நாட்டுக்குள் வருகை தந்துள்ளமையாகும்.

குறித்த இரசாயன உர தயாரிப்பு சீன நிறுவனத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும், நிறுவனங்களும் அந்தளவிற்கு சக்தி வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.

இதனிடையே, இந்தியாவுடன் மிகவும் அவசரமாக ஒப்பந்தங்களைச் செய்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள திரவ நைட்ரஜன் உரத்தின் தரம் தொடர்பிலும் தற்போது விவசாயத்துறை நிபுணர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது உரிய பரிசோதனைகளை முன்னெடுத்து நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

மேலும், அரிசி, பருப்பின் விலையை பார்த்துக் கொள்வதற்காகவா நான் இருக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறெனில் மக்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக இல்லையெனில் எதற்காக அவர் இருக்கிறார்? எனவும் அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *