மக்களுக்கு வீடு இல்லாவிட்டால் பணம் கொடுத்து வீடு வாங்கிக் கொடுப்பேன் துமிந்த தெரிவிப்பு!
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் கண்டி – கொக்கனகல, மல்கமன் சந்தி, பூஜாப்பிட்டி, மேல் கித்துல்கல ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அதன் உரிமையாளர்களிடம் துமிந்த சில்வாவின் தலைமையில் நேற்று கையளிக்கப்பட்டன.
இதன்போது ஹரிஸ்பத்துவ பகுதியில் நிர்மாணிக்கப் பட்டுள்ள வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட துமிந்த சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அர்ப்பணிப்புடன் வேலை செய்வதால், வீடமைப்பு அதிகார சபை என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. வீடமைப்பு அதிகார சபை தற்போது சிறந்த நிறுவனமாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அதில் மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் பணம் இல்லாவிட்டால் பணம் கொடுத்து வீடு வாங்கிக் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொழும்பு மாவட்ட மக்களுக்காகப் பணியாற்றும்போது மக்களின் துயரம் எத்தகையது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
இதன் காரணமாகவே எனக்கு வீடமைப்பு அதிகார சபை யின் தலைவர் பதவியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் 70,000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சிறந்த சேவையாற்றுபவர்களையே பொது மக்கள் விரும்புவார்கள்.
நான் அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பேனா இல்லையா என்பது தெரியாது. எனினும் சிறந்த சேவைகளை வழங்கியதன் காரணமாகவே எனக்கு இவ்வாறான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
வீடமைப்பு அதிகார சபையின் பொறுப்புகளை ஏற்றதன் பின்னர் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரையில் பணிகளை நிறைவு செய்தே வீட்டிற்குச் செல்கிறேன்.
எனினும், சில பணியாளர்கள் மாலை 4 மணிக்கே அலுவலகத்திலிருந்து செல்கின்றனர்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அதி காரிகள் அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
அத்துடன், சேதனப் பசளையினூடாக விவசாயத்துறையைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் இலக்காகும்.அதனைத் திசைதிருப்புவதற்குச் சிலர் முயற்சித்து வருகின்றனர்.
ஜே.வி.பி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆகியோர் இணைந்தே அதனை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறியளவிலான எண்ணிக்கையிலானோரே இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.