தெற்காசியாவில் ஆதிக்கத்தை செலுத்தும் சீனா!
சீனா மேற்கொள்ளும் மிகப்பெரிய ஆக்கிரமிப்பு காரணமாக தெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து நிலவுவதாக இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகின் சக்திவாய்ந்த நாடாவதற்காக தெற்காசியாவிலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும் மிகப்பெரிய ஆக்கிரமிப்பை சீனா மேற்கொண்டு வருகிறது.
புவி அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான உத்திகளிலும் சீனாவின் போட்டியை காண முடிகிறது.
அண்மைக்காலங்களில் பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் சீனாவின் இராணுவ உதவியை அதிகம் பெற்றுள்ளன.
நேபாளம், இலங்கை, மாலைத்தீவிலும் குறிப்பிடத்தக்க அளவில் சீனா முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நாடுகளுக்கு சீனா புரியும் உதவிகள் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சி.
இதனால் தெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து நிலவுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க அயல் நாடுகளுடனான உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்.
அயல் நாடுகளுடனான பண்பாட்டு பிணைப்புக்களை இந்தியா முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
இந்தியா அயல் நாடுகளின் நண்பன் என்பதை அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்