பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பரிசோதனை முயற்சியாக மனித உடலுக்கு மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். முதன்முறையாக பன்றி ஒன்றின் சிறுநீரகம், மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எந்தவித எதிர்ப்பையும் ஆற்றவில்லை என இந்த சோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அடுத்த கட்ட சோதனையில் வெற்றி பெற்றால் மனித உறுப்புகளின் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த சோதனை நிச்சயம் உதவும் எனவும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சிகிச்சை மூளை செயல்பாடு செயலிழந்துள்ள நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பன்றியின் சிறுநீரகத்தை நோயாளியின் ரத்த நாளங்களில் இணைத்து மூன்று நாட்களுக்கு இணைத்து சோதித்துப் பார்த்துள்ளனர் மருத்துவர்கள். அதுவும் அந்த சிறுநீரகத்தை உடலுக்கு வெளியிலேயே வைத்து சோதனை செய்துள்ளனர் மருத்துவர்கள். அதன் மூலம் அதன் செயல்பாட்டை மருத்துவர்கள் கவனித்துள்ளனர்.
இந்த பரிசோதனையை தலைமை தாங்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர், மருத்துவர் ராபர்ட் மாண்ட்கோமெரி “உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பிறகு சிறுநீரகத்தின் செயல்பாடு வழக்கமானதாகவே இருந்தது” என தெரிவித்துள்ளார்.
மருத்துவ உலகின் இந்த பரிசோதனை புதியதொரு புரட்சியாக பார்க்கப்படுகிறது.